நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் பகுதியில் உள்ள வடசேரியில் சுப்பிரமணியன் என்பவர் தனது மனைவி ஹேமா, மகள் ஷிவாணி, தாயார் ருக்மணி ஆகியோருடன் வசித்து வருகிறார். தனது குடும்ப தேவைக்காகவும், மகளின் படிப்பிற்காகவும் கந்துவட்டிக்கு கடன் வாங்கிய சுப்பிரமணியன், கூடுதல் வட்டி காரணமாக பணத்தை கொடுக்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் சுப்பிரமணியனை வீடு தேடி வந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கந்துவட்டி கொடுமை காரணமாக தாயார், மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து சுப்பிரமணியனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு செய்துக்கொண்டனர். இது தொடர்பாக அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் நால்வரின் உடலையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு, இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவலர்கள், கந்துவட்டி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.