சென்னை:

ரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணத்தை 200 மடங்கு உயர்திதி அறிவித்துள்ளது தமிழக அரசு அரசு.

தமிழகத்தில் அதிகரித்து வந்த தனியார் மற்றும் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால், விளம்பர பதாதைகள் வைக்க நீதிமன்றம் கடுமையான வழிமுறைகளையும் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

மேலும்,  சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், பொதுஇடங்கள், அரசு சுவர்கள், மலைகள், இயற்கை வளங்கள் போன்றவற்றில் அரசியல் கட்சியினர், ஆன்மீகவாதிகள், கல்லூரி முதலாளிகள், வியாபார பெருமக்கள் தங்களது கட்சி விளம்பரங்களை வரைந்து  விளம்பரப்படுத்துவதுதால், அதன் அழகே பாழாகிறது என்றும், இதை அரசு தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து,. தமிழகத்தில் மாநகராட்சி,. நகராட்சி,   உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் அனுமதி பெற  வேண்டியது கட்டாயம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு அதற்கான அனுமதி கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது  அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணத்தை 200 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சென்னையில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணம்,  விளம்பர பலகைகளின் அளவும் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாக சென்னைமாநகராட்சி அறிவித்து உள்ளது.  இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் கடைகள் உள்ள சாலையிலிருந்து 3 அடிக்கு உள்ளேதான் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். 4  வழிச்சாலைகளில் 20 நீளமும், 10 அடி அகலமும் கொண்ட பலகைகளை மட்டுமே வைக்க வேண்டும். 6 வழிச் சாலைகளில் 30 அடி நீளமும் 15  அகலமும், அதற்கு மேற்பட்ட சாலைகளில் 40 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட விளம்பர பலகைகளை மட்டுமே வைக்க முடியும்.

பழைய சட்ட விதிகளின் படி ஒரு சதுர மீட்டருக்கு 120 முதல் 300 வரை கட்டணம் நிர்ணயம் (ஆறு மாதத்திற்கு ) செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் புதிய  சட்ட திருத்தத்தின்படி அனைத்து வகையான விளம்பர பலகைகளுக்கும் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 18 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணம் 200 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதேபோன்று விண்ணப்ப கட்டணமும் ரூ. 500லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகளில் உள்ள சாலைகளில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணமும்  உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சியில் விண்ணப்ப கட்டணம் ரூ. 2 ஆயிரமாகவும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளில்  விண்ணப்ப கட்டணம் ரூ.1000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாநகராட்சிகளில் உள்ள முக்கிய சாலைகளில் விளம்பர பலகை வைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 10 ஆயிரமும், மற்ற சாலைகளுக்கு ரூ. 8 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் உள்ள பிரதான சாலைகளில் விளம்பர பலகை வைக்க ரூ. 6 ஆயிரமும், மற்ற சாலைகளில்  வைக்க ரூ. 4 ஆயிரமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டவுன் பஞ்சாயத்துகளில் உள்ள மெயின் சாலைகளில் வைக்க ரூ. 4 ஆயிரமும்,  மற்ற சாலைகளில் வைக்க ரூ. 3 ஆயிரமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சிகளுக்கு வருமானம் பெரும் என நம்பப்படுகிறது.