டில்லி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9% பங்குகளை $ 5700 கோடி அதாவது ரூ.43574 கோடி விலை கொடுத்து முகநூல் நிறுவனம் வாங்குகிறது.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனம் தொடங்கி குறுகிய காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.   இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களில் தொடங்கி தொலைத் தொடர்பு வரை பல தொழில்களில் கால்  பதித்துள்ள ரிலையன்ஸ் குழுமம் முதல் இடத்தில் உள்ளது.

முகநூல் நிர்வாகம் ரிலையன்ஸ் ஜியோவின் 9.9% பங்குகளை $ 5700 கோடி அதாவது ரூ.43574 கோடி விலை கொடுத்து முகநூல் நிறுவனம் வாங்குகிறது.  இது முகநூலின் மிக அதிக அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும்.  இந்த முதலீட்டினால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் முதல் 5 நிறுவனங்களில் ஒன்றாக ஆகி உள்ளது.

முகநூல் நிர்வாகம்,”இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவுக்கு எங்கள் பங்களிப்பை நாங்கள் அளித்துள்ளோம்.  ஜியோ நிறுவனம் உலகில் மிகவும் பரவத் தொடங்கி உள்ளது.  ஜியோ நிறுவனம் தொடங்கி நான்கு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் 38.8 கோடி வாடிக்கையாளர்களை அடைந்துள்ளது.  இதன் மூலம் தொலைத் தொடர்பு துறையில் ஒரு புது நிலையை எட்டி உள்ளது.  இந்நிறுவனத்தின் மூலம் நாங்கள் அதிக அளவில் இந்திய மக்களுடன் இணைகிறோம்.” எனத் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்துக்கு தற்போது ஜியோ நிறுவனத்தை விரிவாக்க பணிகளால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது.   இந்த வர்த்தகம் மூலம் ரிலையன்ஸ் குழுமம் கடனிலிருந்து முழுமையாக விடுபடும்.   இதனால் இந்த குழுமம் தொடங்க உள்ள வேறு பல வர்த்தகங்களுக்கு முதலீடு செய்வது எளிதாகும்.

முகநூலை பொறுத்தவரை இந்தியாவில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  அவர்களைக் கொண்டு பேடி எம், அமேசான் போல வாட்ஸ்அப் மூலம் பண வர்த்தனை செயலியை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.   அவ்வாறு இந்திய வாடிக்கையாளர்களைக் கவர இந்த பங்கு வர்த்தகம் முகநூல் நிர்வாகத்துக்கு மிகவும் உதவும் எனக் கூறப்படுகிறது.