சென்னை:
மேட்டுரில் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சையின்போது, தவறான சிகிச்சையின் காரணமாக கண் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு நஷ்டஈடாக தலா 3 லட்சமும், மாதம் ரூ.1000 ஓய்வூதியமும் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள்
                             கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள்

சிகிச்சையின்போது ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய செய்திகள் நாளிதழ்கள் மற்றும் மீடியாக்களில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தின்.  உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, தமிழக அமைச்சர்கள் மற்றும் சுகாதார செயலாளரை மேட்டுருக்கு அனுப்பி வைத்தது. அவர்களின் அறிக்கையின் பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:  தேசிய கண்ணொளி இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கண் புரையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கும் வகையில் கண்புரை அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த 14.6.2016 முதல் 16.6.2016 வரை மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கண்புரை அறுவை சிகிச்சை  செய்து கொண்டவர்களில் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை என்பதை அறிந்தவுடன், இந்த நாட்களில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 23 பேர் களுக்கும் சேலம் மற்றும் கோயம்புத்தூர் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
1-mettur
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 23 நோயாளிகளில், சிகிச்சைக்குப் பின் இரண்டு நபர்களுக்கு பார்வை திரும்ப கிடைத்துள்ளது. 17 நோயாளிகளுக்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கண் சிறப்பு மருத்துவர்களின் கருத்துப்படி, மூன்று மாதங்களுக்கு பிறகே பார்வை திரும்ப கிடைப்பது குறித்து தெரிய வரும். நான்கு நோயாளிகளுக்கு இன்னும் தொற்று முழுவதுமாக நீங்கவில்லை என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தொற்று பாதிப்பு ஏற்பட்ட 23 நபர்களுக்கும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும்,  மேலும், பார்வை பாதிக்கப்பட்ட 21 பேர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவும் முதல்/அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.