திருச்சி

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல உள்ளது.

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. நடப்பு ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள்.வரும் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி இரவு 8 மணிவரை திறந்திருக்கும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகத் திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்க்னவே இரு ரயில்கள் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இது மாற்றி அமைக்கபட்டுள்ளது.

அதாவது சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12633) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (23-ந்தேதி) ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12634) இன்று மற்றும் நாளை (23-ந்தேதி) ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16101) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (23-ந்தேதி) ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்திலிருந்து மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16102) இன்று மற்றும் நாளை (23-ந்தேதி) ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.