கூத்தாநல்லூர்: 
திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் 12 மணி நேர லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவு பெற்றது.
கூத்தாநல்லூர் வட்டம், மேல எருக்காட்டுர் கிராமம், உப்புக்கோட்டைத் தெருவைச் சேர்ந்த அசோகன் (62). இவர், புதுக்கோட்டை ,திருவாரூர், கூடலூர் உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பல்கலைக்கழகத்தில், 6 பேர் பணியாற்றாமலேயே, பணியாற்றியதாக அசோகன் தெரிவித்தும் மோசடி செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்க்கப்பட்டதாக, பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அசோகன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அசோகன் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட 6 பேர் மீதும், வேலூர் மாவட்ட குற்றவியல் காவலர்கள் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, அசோகன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதன் பிறகு அசோகன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது. புதன்கிழமை, காலை 6 மணிக்கு, அசோகனின் சொந்த கிராமமான, மேல எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, 4 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வந்தனர்.
வீட்டின் முன்பக்கம் உள்ள பெரிய இரும்புக் கேட்டை, பூட்டுப் போட்டுப் பூட்டி விட்டுச் சோதனையிட்டு வந்தனர். 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.