பாடியாலா

முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி காங்கிரஸில் இருந்து விலகப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்து இடையில் கடும் பனிப்போர் நிலவியது.  இது வலுத்ததன் காரணமாக அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.  அங்கு புதிய முதல்வர் நியமிக்கப்பட்டு சித்து காங்கிரஸ் தலைவராக நீடித்து வருகிறார்.

பதவி விலகிய அமரீந்தர் சிங் டில்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்களைச் சந்தித்தார்   இதனால் அவர் பாஜகவில் இணையலாம் எனப் பேசப்பட்டது.   இந்நிலையில் அமரீந்தர் சிங் புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமரீந்தர் சிங் மனைவியான பிரனீத் கவுர் பாடியாலா மக்களவை தொகுதி உறுப்பினர் ஆவார்.  அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார்.  அவர் செய்தியாளர்களிடம் தாம் காங்கிரஸில் இருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார்.  தமக்குச் சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி தலைமையில் முழு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.