சென்னை: நெஞ்சுவலி காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலமாக உள்ளார் என காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நேற்று நள்ளிரவு  திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், நள்ளிரவில் அவரது குடும்பத்தினர்  போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இ  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் தெரிவித்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவராமன், “இளங்கோவன் அவர்கள் ஈரோடு வெற்றிக்கு பிறகு டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்தித்து விட்டு 4:30 மணியளவில் சென்னை திரும்பினார். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவல் அறிந்து நாங்கள் அவரைக் காண வந்தபோது, அவர் மிகவும் நன்றாக இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்பி விடுவார் என மருத்துவர்கள் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் உடல் நலம் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இந்த நேரத்தில் எதற்கு என்னை சந்திக்க வந்து உள்ளீர்கள். உங்களோட உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார்” என்று கூறினார்.