ஈரோடு:  தோல்வி பயத்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கச்சேரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று காலை ஈவிகேஎஸ் இளங்கோவன் தமது குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாற்றத்தை விரும்பும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். திமுக, காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருப்பது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. 5 தொகுதி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பது தான் அவர்களின் விருப்பமாக உள்ளது என்று  ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.