திருநெல்வேலி மாவட்டம் வேங்கடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் திருமாறன் 55 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தனது தந்தையின் கல்லறை மலேசியா-வில் இருப்பதை அறிந்து சமீபத்தில் அங்கு சென்று வந்தார்.

திருமாறன் குறித்த விவரம் ஆங்கில நாளேடான டைம்ஸ் இதழில் இன்று வெளியானது. இந்த செய்தி தன்னை வெகுவாக பாதித்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1967 ம் ஆண்டு தான் பிறந்த உடன் தனது தந்தை ராமசுந்தரம் என்கிற பூங்குன்றன் மறைந்ததை அடுத்து தனது தாயாருடன் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதாகவும், 35 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயையும் இழந்து உறவுகள் இன்றி அனாதையாக வாழ்ந்ததாகவும் தெரிவித்த திருமாறன்.

தன்னைப் போல் உறவுகள் இல்லாத அனாதைகளுக்கு உதவி வருவதாகவும் தெரிவித்த அவர் இதுவரை 60 பேருக்கு திருமணம் செய்துவைத்துள்ளதோடு 100க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனது தந்தை ராமசுந்தரம் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் அதிகமானதை அடுத்து அவரை அறிந்து கொள்ளும் முயற்சியில் சமீபத்தில் இறங்கியதாவதும் தனது தந்தை கெர்லிங் தோட்ட தேசிய வகை தமிழ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார் என்ற ஒரே தகவலைக் கொண்டு அவரைப் பற்றி அறியும் முயற்சியில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இணையதள தேடுதலில் அந்த பள்ளி வேறு ஒரு இடத்தில் தற்போது செயல்பட்டு வருவதை அறிந்து அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரத்தை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்ட திருமாறனுக்கு தனது தந்தையிடம் பயின்ற நபர்களின் தொடர்பு கிடைத்திருக்கிறது.

80 வயதான அவர்களின் உதவியுடன் தனது தந்தையின் கல்லறை இருப்பதை அறிந்து நவம்பர் 8 ம் தேதி மலேசியா சென்ற திருமாறன் நவம்பர் 16 வரை அங்கிருந்த நாட்களில் பலமுறை தனது தந்தையின் கல்லறைக்குச் சென்று வந்துள்ளார்.

தவிர, அவரிடம் படித்த மாணவர்களிடம் கண்டிப்புடன் இருந்ததோடு மட்டுமன்றி படிப்புதவி செய்ததோடு நன்றாக படித்த மாணவர் ஒருவருக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்து மேலும் நன்றாக படிக்க உதவிய தகவலும் அவர்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

56 வயதான திருமாறன் 55 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தனது தந்தை குறித்த இந்த செய்தி “திருமாறன் அவர்களது அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாட்டையும் வெளிப்படுத்துவதாக உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும், “மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.