பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு.

ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். நடிகை ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார் . ரூபன் எடிட்டிங். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி ஷெட்யூல் தொடங்கினார் பாண்டிராஜ். அந்த ஷெட்யூல் முடிவுக்கு வந்ததும் இதுபற்றி ட்வீட் செய்துள்ள பாண்டிராஜ், 51 தினங்கள் தொடர்ச்சியாக நடத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் படத்தில் இடம்பெற்றிருப்பதாக உலவும் செய்தி, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது. சூர்யா பங்கேற்கும் சண்டைக்காட்சி இப்பொழுது படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.