சென்னை:  பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து  திமுகவில் இணைந்தார்.  அவருடன் ஈரோடு நிர்வாகிகளும் இணைந்தனர். ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு இந்த அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.

தமிழக பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வருபவர் என்.விநாயகமூர்த்தி. இவர் சமீப நாட்களாக கட்சி மீது அதிருப்தியில் இருந்த நிலையில், இன்று  அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன்,  ஈரோடு மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ், மதுரைவீரன் மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, திமுக   பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை கே.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து என்.விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக பணியாற்றி வநதேன். தற்போது, தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றுகிற தலைவராக, முதல்வர் பணியாற்றி வருகிறார். அவர் தலைமையின்கீழ் பணியாற்றவும் – கருணாநிதி முதல்வராக இருந்து எங்கள் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு 2009ல் வழங்கியதால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். அத்துடன், அரசுப் பணியிலும் பணியாற்றி வருகிறார்கள்.

நான், “மதுரை வீரன் மக்கள் கட்சி” என்ற கட்சியை நடத்தி வருகிறன். அதில் 3இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுப்பினராக உள்ளார்கள். அவர்களையும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்து பணியாற்றுவதற்கும், இணைப்பு விழா நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அத்தனை பேரையும், நடைபெற உள்ள இடைத் தேர்தலில், முதல்வர் ஆசி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிப்பார்கள். இத்தொகுதி முழுவதும் முழு வீச்சுடன், தீவிர களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, கழகத் தலைவர் அவர்கள் கரத்தில் ஒப்படைப்பேன் என்று இந்நேரத்தில் உறுதி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.