சென்னை: ஜெ.மறைவைத் தொடர்ந்து, சசிகலா சிறைக்குச் சென்றதும், கடந்த 2017-ஆம் ஆண்டு  இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது எனவும்  அறிவிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில்  தொடரப்பட்ட வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மார்ச் 15ந்தேதி விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட மன்னார்குடி வகையறாக்கள் அடியோடு நீக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து, பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்  நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன்  வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில்,  அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்கள். அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும்,  பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என  அறிவிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பின்னர், கடந்த 3  ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

தற்போது  சிறையில் இருந்து தண்டனை காலம் முடிந்து விடுதலையான சசிகலா கடந்த 8-ம் தேதி தமிழகம் திரும்பினார். இதையடுத்து, இபிஎஸ் ஓபிஎஸ் தலைமைக்கு எதிரான  அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரிய  வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, சசிகலாவின் முறையீட்டை மார்ச் மாதம் 15-ம் தேதி விசாரிப்பதாக சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.