சென்னை: தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மாற்றங்கள் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னரான தேன்மொழி அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி-யாக இருந்த வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

குறிப்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக இருந்த அன்பு, திருநெல்வேலி மாநகர ஆணையராக மாற்றப்பட்டிருக்கிறார். அவர் வகித்து வந்த பொறுப்பில், பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு ஐ.ஜி-யான கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் கமிஷனரான கண்ணன், சென்னை பெருநகர காவல் தெற்கு பகுதி சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பிலிருந்த தினகரன், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுதாகர் மதுரை சரக டி.ஜி.ஜி-யாகவும்,

வி.பாலகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு பகுதி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், தமிழ்நாடு சிறப்புக் காவல் 13-வது பட்டாலியனுக்கு கமாண்டன்ட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய தூத்துக்குடி எஸ்.பி-யாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய திருநெல்வேலி எஸ்.பி-யாக கிருஷ்ணராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

பெண்களை தாக்கிய புகாரில் சிக்கிய பாண்டியராஜன்  நீலகிரி எஸ்.பி-யாக அரசு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 கரூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட பகலவன்,  திருவல்லிக்கேணி துணை ஆணையராக  நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சரவணன், பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி புதிய துணை ஆணையராக வி.ஆர்.ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பணியிட மாற்றத்தின்படி, எட்டு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்குள் மட்டும் ஒன்பது அதிகாரிகள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.