சென்னை

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஒ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே, கட்சியில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து 1972 இல் அவர் அஇஅதிமுக கட்சியை தொடங்கினார். தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வென்று இமாலய சாதனையை படைத்தார். எம் ஜி ஆரே அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றார்.

ஆயினும் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் கட்சியும், ஆட்சியும் இரு வேறு தலைவர்களிடமே இருந்தாலும் எம்ஜிஆரை மீறி எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையே இருந்தது.   ஆனால் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிளவுபட்டு 1989 தேர்தலில் போட்டியிட்டனர். பிறகு எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்தது.

பிறகு அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வானார். 1991 பேரவைத் தேர்தலில் வென்று முதல்வரான ஜெயலலிதா,  மறையும் வரை அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார்.   ஜெயலலிதா மறைந்ததும்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முதல்வர் பதவி கிடைத்தது. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த சில வாரங்களிலேயே சசிகலா முதல்வராகத் தேர்வு செய்யப்பட, அவருக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார்.  ஆளுநரின் அழைப்புக்காகக் காத்திருந்த சசிகலா, சொத்து வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார்.  ஆனால் ஓபிஎஸ் தலைமையில் தனி அணி செயல்பட்டதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

கடந்த 2017 ஆகஸ்ட்டில் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. அதன்பிறகு அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு முதல்முறையாக இரட்டைத் தலைமையில் கட்சி இயங்கி இரட்டை இலை சின்னத்தைக் கட்சி மீட்டது.

கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுவில், ‘பொதுச் செயலாளர் பதவிக்குப் பதிலாக இனி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கும். பொதுச் செயலாளரை போல இப்பதவிகளுக்கும் அதிமுக தொண்டர்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுப்பார்கள் என முடிவு எடுக்கப்பட்டு டிச.7-ம் தேதி தேர்தல் நடக்கும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமியும் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால், இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்புமனுக்களை நேற்று பரிசீலனை செய்தனர். அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.