மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சக்திவேல், நேற்று தனது மகளுக்கு வளைகாப்பு நடத்துவது போல் தான் செல்லமாக வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்தினார்.

ஜெய்ஹிந்த்புரம் மட்டுமன்றி மதுரை முழுவதும் இந்த நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது.

‘சுஜி’ என்று பெயரிட்டு தனது மகளைப் போல் வளர்த்து வந்த சக்திவேல் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மூன்றாண்டுகளுக்கு முன் தங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாய்க்குட்டி இந்த டாபர்மேன் வகை நாய்க்குட்டி என்பதால் இதன்மீது அதீத அக்கறையுடன் வளர்த்துவந்தனர்.

தற்போது கருவுற்றிருக்கும் நிலையில், டிசம்பர் 11 அல்லது 12 தேதிகளில் குட்டியை எதிர்பார்த்து காத்திருக்கும் ‘சுஜி’க்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்ட சக்திவேல், தங்கள் நெருங்கிய உறவினர்களை அழைத்து நாய்க்கு நலங்கிட்டு மஞ்சள் குங்குமம் பூசி முன் கால்களில் வளையல் மாட்டிவிட்டனர்.

ஐந்து வகை கலவை சாதத்துடன் அமர்க்களமாக நடந்த இந்த வளைகாப்பு நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.