சென்னை

சென்னை நகரில் 611 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனச் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள காவல் பணியாளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோரை, வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல்ஆணையர் கபில் குமார் சி.சரட்கர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சுரேஷ், கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் காவல் பார்வையாளர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உள்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்,

“தேர்தல் பொதுபார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் முன்னிலையில் காவல்துறை பணியாளர்களையும், பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்களின் நேரடி கண்காணிப்பில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்களையும் சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி முதற்கட்டமாக நடைபெற்றது. மேலும், 5 வாக்குச்சாவடிகள் உள்ள மையத்திற்கு ஒரு போலீசாா், 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி உள்ள மையத்திற்கு 2 போலீசார் என மொத்தம் 9 ஆயிரத்து 277 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல, வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு 19 ஆயிரத்து 419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 97 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 579 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. தற்போது, 32 வாக்குச்சாவடிகள் கூடுதலாக பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 

அதன்படி, தற்போது வரை சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அதில் மிகவும் பதற்றமானவையாக 23 வாக்குச்சாவடிகள் உள்ளது. 769 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களாக 963 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரையில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 524 பேருக்கு ‘பூத் சிலிப்’ கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 3 லட்சத்து 8 ஆயிரத்து 277 பேருக்கு ‘பூத் சிலிப்’ கொடுக்கப்பட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 82 பேர் நேற்று முன்தினம் தபால் வாக்களித்துள்ளனர். வாக்குச்சாவடி அமைந்துள்ள 944 இடங்களுக்கு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய 239 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மாற்று வாக்கு எந்திரம் நிறுவப்படும்” 

என்று அறிவித்துள்ளார்.