சென்னை: அரசு பள்ளியில் 4வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கும் வகையில், திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க எஸ்சிஇஆர்டி (State Council of Educational Research and Training) உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆங்கில புலமையை திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அதன்படி, அரசு பள்ளியில், ஆங்கிலத்தை சரளமாக பேசுவதில் திறனும், கற்பித்தலில் ஆர்வமும் உள்ள ஆசிரியர்களை ஆன்லைனில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் அரை மணிநேரம் தேர்வு நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அரசுப் பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Spoken English பயிற்சி வகுப்பு வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே அமலுக்கு வரும் என்றும் முன்னதாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு வரும் 30, 31-ம் தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.