சென்னை: முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,  செமஸ்டர் தேர்வுகள்  மார்ச் 15 முதல் 26 வரை ஆன்லைனில் ஒரு மணி நேரத் தேர்வாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு பல தேர்வுகள் ஆன்லைனிலும், சில தேர்வுகள் நடத்தப்படாமலேயே தேர்ச்சிகள் அறிவிக்கப்பட்டன. பின்னர், மத்திய மாநில அரசுகள் வழங்கிய தளர்வுகள் காரணமாக, இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு (2020) இறுதியில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பல தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன.
பிப்ரவரி 8ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், கலை அறிவியல் என அனைத்து  இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்,  முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் (மார்ச்) 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.