சென்னை: 2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அப்போது, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர்  கூறினார்.

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு பொறியியல் சேர்க்கையில் 2% ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், ” தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு,  தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் அனைத்துப் பிரிவுகளிலும் சென்ற ஆண்டைவிட விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 905. சென்ற ஆண்டைக் காட்டிலும், 36 ஆயிரத்து 975 மாணாக்கர் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.  இந்த ஆண்டு பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 80. இந்த எண்ணிக்கையும் சென்ற ஆண்டைக்காட்டிலும், 24 ஆயிரத்து 35 பேர் கூடுதலாகும்.

தமிழ்நாடு மாணவர்கள் 2022-க்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இன்று வெளியிடப்படுகிறது. இதில் இடம்பெறாதவர்களுக்கு அடுத்து வரக்கூடிய பட்டியல்களில் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரத்து 587 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 12 ஆயிரத்து 666 மாணவர்களும், 9 ஆயிரத்து 981 மாணவிகளும் உள்ளனர். இந்த 9,981 மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதற்கான ஆணையை தமிழக முதல்வர் அளித்துள்ளார். மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்தால் அவர்களுக்கு இந்த தொகை அளிக்கப்படும்.

விளையாட்டுப் பிரிவில் 3102 மாணாக்கர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1875 மாணாக்கர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, 1258 மாணாக்கருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல்,முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதார்ரகள், மாற்றுத்திறனாளிகள் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும். இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்குபெற உள்ளது. அக்கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடுகள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன.

 அதே மாதிரி இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தொழில் கல்வி பாடப்பிரிவு வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தர வரிசை எண் வழங்குவதற்கு ஏற்கனவே உள்ள நடைமுறையில் கூடுதலாக அரசின் புதிய வழி காட்டுதலின்படி பிளஸ்-2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் 10-ம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால் சம வாய்ப்பு எண்ணின் வகைப்பாடு குறைந்து இந்த வருடம் ஒரு மாணவருக்கு கூட சம வாய்ப்பு எண் பயன்படுத்தவில்லை.

ஏனென்றால் பிளஸ்-2 மதிப்பெண்ணையும் பார்க்கிறோம். எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண்ணையும் பார்க்கிறோம். இரண்டு மதிப்பெண்ணையும் கூட்டி பார்த்து அதன் மீது முடிவெடுப்பதால் அந்த பிரச்சினையும் இந்த ஆண்டு எதுவும் வரவில்லை. மாணவ-மாணவிகள் தங்களது தர வரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதில் தர வரிசை பட்டியல் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பித்து தர வரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டிருந்தால் அல்லது வேறு குறைகள் இருந்தால் இன்று முதல் 4 நாட்களுக்குள் 19.8.22-க்குள் தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்து தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். அவர்களின் குறைகள் ஆராயப்பட்டு அவை நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.

அதே போல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணவர்கள் தங்களது அருகாமையில் உள்ள சேவை மையத்திற்கு சென்று 19.8.2022-க்குள் தங்களது பெயரை இணைத்துக் கொள்ளலாம். 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து முதல் 10 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள். 1. ரஞ்சிதா கே.-எஸ்.என்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, கொல்லம். (இவர் தமிழக மாணவிதான். கொல்லத்தில் படித்து முதலாவதாக வந்துள்ளார்) 2. ஹரினிகா.எம்-அவ்வை எம்.எச்.எஸ். சடையாம்பட்டி, தர்மபுரி மாவட்டம். 3. லோகேஷ் கண்ணன் எம்-வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி, திருவள்ளூர் மாவட்டம். 4. அஜய்.எச்-கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சூலூர், கோவை. 5. கோபி.ஜி-அமலா அன்னை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்ள்ளி, பொன் புதுப்பட்டி, புதுக்கோட்டை. 6. பார்த்திக்‌ஷா.டி-நேஷனல் மாடல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம், கோவை. 7. பவித்ரா.பி-ஸ்ரீசங்கரவதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, பம்மல், சென்னை. 8. ஹரிகுரு.ஜெ-எஸ்.ஆர்.வி.பாய்ஸ் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம், நாமக்கல். 9. மதுபாலிகா. எம்-செயின்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மேலமையூர், செங்கல்பட்டு. 10. ஷாருகேஷ். கே.-மகாத்மா மாண்டேசுவரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பாபா பேட்டை, மதுரை.

20-ந் தேதி முதல் சிறப்பு ஒதுக்கீட்டில் வந்தவர்களுக்கும், 25-ந்தேதி முதல் அக்டோபர் 21 வரை பொது ஒதுக்கீட்டில் வருபவர்களுக்கும் இந்த கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்வு அக்டோபர் 22 மற்றும் 23-ந்தேதி நடைபெறும். கலந்தாய்வு இறுதி நாள் அக்டோபர் 24-ந்தேதியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்; 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு…