சென்னை

சென்னை நகரில் 80% இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக்ஜம் புயலால் சென்னையில் கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று இரவு மிக்ஜம் புயல் சென்னையைக் கடந்த பிறகு மழையின் தீவிரம் குறைந்து இன்று காலையில் இருந்து வெயில் தலை காட்டத்தொடங்கியது.

இதனால் சென்னை வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. நகரில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் தொடர்பாகத் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

ஷிவ்தாஸ் மீனா,

”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 சதவிகித இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து தடையின்றி இயங்கி வருகிறது. சென்னை முழுவதும் தற்போது 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் 30% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 70 சதவிகித தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டுள்ளது”

என்று தெரிவித்தார்.