வேலூர்

சுற்றுலாப் பயணிகள் வேலூர் கோட்டையை இரவிலும் கண்டு ரசிக்க மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வேலூர் மாநகராட்சி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் நகரில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் கோட்டையை அழகுபடுத்த ₹33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் கோட்டையின் பழமை மாறாமல் அழகுபடுத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

இதில் அலங்கார விளக்குகள், கேமராக்கள் பொருத்துவது, பெயர்ப் பலகை வைப்பது, தண்ணீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை மேற்கொள்வது என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.   வேலூர் கோட்டையில் உள்ள சாலைகள், பூங்காக்கள் மற்றும் பழமையைப் பிரதிபலிக்கும் வகையில் தெருவிளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.

மாலை வேளைகளில் கோட்டைக்கு வருபவர்கள் வெளியே உள்ள பூங்காவில் அமர்ந்து மகிழ்கின்றனர். இந்த பூங்காவில் இருந்து பார்க்கும்போது கோட்டையின் கம்பீர தோற்றத்தைக் காணலாம்.  சூரியன் மறைந்த பின்னர் மின் விளக்குகள் இல்லாததால் கோட்டை முழுவதும் இருள் சூழ்ந்திருக்கும் என்பதால் அதை ரசிக்க முடியாது.  எனவே இரவு நேரத்திலும் கோட்டையைப் பார்க்கும் வகையில் மின்விளக்குள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.