சென்னை: ரூ.72 கோடி செலவில் 8 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு  புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கைக்கு  விவாதங்கள் முடிவடைந்த பிறகு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு அறிவிப்புகளை அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  பரமக்குடி, உடுமலைப்பேட்டை, பழனி, ஓசூர், வால்பாறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி மற்றும் பூந்தமல்லி ஆகிய 8 அரசு மருத்துவமனைகள்  தரம் உயர்த்தப்பட்டு கூடுதல் கட்டிடங்கள் கட்ட தலா ரூ.9 கோடி வீதம்,  மொத்தம் ரூ .72 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும். 15வது நிதி ஆணையம் தமிழ்நாட்டின் மருத்துவமனை மேம்பாட்டுக்கு வரும் 5 ஆண்டுகளுக்கு பரிந்துரைத்துள்ள ரூ.42800 கோடி நிதியில் மருத்துவ வசதிகள் மேப்படுத்தப்படும்.

அதன்படி,  வட்டார அளவிலான மற்றும் நகர்புற மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு நோய் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.

இந்நிதியின் கீழ் இம்மையங்கள் அனைவருக்கும் நலவாழ்வு மையங்கள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.