டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக சோனியாவுக்கு அமலாக்கத துறை மீண்டும்  சம்மன் அனுப்பி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு சம்பந்தமாக, வரும் 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, சோனியா, ராகுல் காந்திக்கு கடந்த ஜூன் மாதம்  விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று  சம்மன் அனுப்பியது. அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனாவுக்கு பிந்தைய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என அவகாசம் கோரியிருந்தார். அதையடுத்து, அவர் ஜூன் 22-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.  ஆனால், அவர் முழுமையாக குணமடையதால், மேலும் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை, தற்போது  மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, ஜூலை 21ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, வயநாடு எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தியது. முன்னதாக,  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் சோனியா காந்தி வரும் 21-ம் தேதி அமலாக்கத் துறையின் டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

ராகுல்காந்தி அமலாக்கத்துறையில் இன்று ஆஜர் எதிரொலி – நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…