டெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அதுகுறித்து,  காவிரி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிரான தமிழகஅரசு மனு மீது வரும் 19-ந் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

மேகதாது அணை திட்டம் தொடர்பாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விசாரிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதுகுறித்து விரைந்து விசாரணை நடத்த தமிழகஅரசு சார்பில்,  மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வரும் 19ந்தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கு காவிரி மேலாண்மை ஆணையமும் துணை போகிறது. இதற்கு  தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைகோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மனுதாக்கல் செய்தது.

தமிழக காவிரி தொழில்நுட்பப்பிரிவின் துணைத்தலைவர் எம்.செல்வராஜு சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மேகதாது அணை திட்டம் தொடர்பாக, கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவையோ காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகிய மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி முறையிட்டார். இதற்கு கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபித்தார்.

தமிழக அரசின் முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.