சென்னை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்ப தராமல்  மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை செந்தில் பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இதே விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021 ஆம் ஆண்டு தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தற்போது வரை அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார்.  சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி அதில் குறிப்பிட்டிருந்தார்.  கடிதத்தை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை ஏற்றுக்கொண்டு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநருக்கு கடந்த 12-ந் தேதி பரிந்துரைத்தார். இதை ஏற்று ஆளுநர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்த போது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மனுவில்,

”ஆவணங்களை திருத்தியதாகச் செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுத் தவறு. செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையைத் துவங்கத் தயாராக இருக்கிறோம். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார். 

செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும். நீண்ட காலமாகச் சிறையில் உள்ளதாகக் கூறும் செந்தில் பாலாஜிதான், விசாரணையைத் தொடங்க விடாமல் தாமதப்படுத்துகிறார். ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.