சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையின் நீர் நிலைகள், அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (24ந்தேதி) தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இ வடகிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, பல்வேறு துறை செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். அவர்களிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, இன்று சென்னையின் நீர்நிலைகள் குறித்து திடீரே ஆய்வு மேற்கொண்டார். தென்சென்னையில்,  பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வடகிழக்கு பருவ மழைக்கு முன் எதிர்கொள்ளவேண்டிய பணிகள் சம்பந்தமான ஆய்வை மேற்கொண்டார்..

காந்தி மண்டபம் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், தூர்வாரும் பணிகள், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள், மழைநீர் தேங்கா வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

காந்தி மண்டபம் சாலையில் மழைக்காலங்களில் தேங்கி போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ள வெள்ள நீரையும், அருகில் உள்ள கேன்சர் இன்ஸ்டிட்யூட், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரையும் அகற்றும் வகையில் 1,516 மீட்டர் நீளத்திற்கு 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன.  வடிகால்கள் மூலம் வரும் மழைநீர் ஒரு பெரிய கீழ்நிலை தொட்டியில் சேமிக்கப்பட்டு பின்பு சிறு கால்வாய் வழியாக பக்கிங்காம் கால்வாய் மூலம் வெளியேற்ற தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கால்வாய்களில் சேர்ந்துள்ள வண்டல்கள், நவீன ஹைட்ராலிக், அதிக உறிஞ்சும் திறன், ஜெட்டிங் வசதி கொண்ட இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வரும் பணியினை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து வண்டல் வடிகட்டும் தொட்டிகளை (Silt Catch Pit) தூய்மைப்படுத்தி, மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யும் பணியினையும் முதலமைச்சர் பார்வையிட்டு இப்பணிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, இப்பகுதியில் வெள்ள நீர் தேங்கா வண்ணம் துரித நடவடிக்கைகளை எடுத்திட அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இந்திரா நகர் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம், திருவான்மியூர் லேட்டிஸ் பாலத்தின் அருகில் பக்கிங்காம் கால்வாயில் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ரோபோடிக் எக்ஸ்கவேட்டர், மிதக்கும் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள், தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.

வனத்துறை சார்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர்ந்துள்ள கழிவுகளையும், குட்டைகள், சிறு பாலங்கள் கீழ் பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளையும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் மிதக்கும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர், நாராயணாபுரம் ஏரியில் 18 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் (Major Drain) பணியினை ஆய்வு செய்த முதலமைச்சர் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

ஆய்வு முடித்தபின்பு, அரசு உயர் அலுவலர்களிடம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு விரைவாக, முழுமையாக இப்பணிகளை முடிக்ககூடிய வகையில், தினமும் கண்காணித்து, பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அனைத்துத் துறை அலுவலர்களும் அளித்திட அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள்! மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு