திருச்சி:
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவராகவும் உள்ளார். அவரது தலைமையிலான இக்குழு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபற்றது.

அதன் பின்னர் சத்திரம் பேருந்து நிலைய கட்டுமான பணி, மத்திய சிறை, வேளாண் கல்லூரி உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் அவர் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் இன்று மாலை சென்னை செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் திண்டுக்கல்லில் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறலும் இருந்ததால் அவசர அவசரமாக திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார்.

திருச்சி பட்டாபிராமன் பிள்ளை தெருவில் உள்ள மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு துரைமுருகன் இன்று மாலை சென்னை புறப்பட்டார்.

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலறிந்த திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.