சென்னை

வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள கன மழை எச்சரிக்கையையொட்டி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

”தமிழகத்தில் இன்று  மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது. 

அதேபோல், நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகச் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.