திருச்சியை சேர்ந்த ஜெகநாதன் செல்வராஜ் என்பவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார்.
பணி ஒப்பந்தம் முடிந்தவுடன் அவருக்கு அந்நிறுவனம், நாடு திரும்ப விமான டிக்கெட் எடுத்துத்தரவில்லை.
இதனால், அந் நிறுவனம் மீது துபாய் தொழிலாளர்கள் கோர்ட்டில் ஜெகநாதன் செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக கோர்ட்டுக்கு சென்று வர அவரிடம் பணம் இல்லை. ஆகவே சுமார் 22 கி.மீ. தூரம் உள்ள கோர்ட்டுக்கு நடந்தே சென்றுவந்தார்.
dubai1
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 25 முறை இப்படி சென்று வந்திருக்கிறார். அதாவது 1,000 கி.மீ. தூரம் கோர்ட்டுக்கு நடந்தே சென்றுவந்துள்ளார்.
இவரது பரிதாபகரமான நிலை துபாய் பத்திரிகைகளில் வெளியானது. இதன் மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செல்வராஜ் பற்றிய தகவலை அறிந்தார்.
தற்போது  இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி தனக்கு அறிக்கை அனுப்புமாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெகநாதன் செல்வராஜ் கூறும்போது, தான் வேலைபார்த்த நிறுவனத்தில் சரியான தங்குமிடம் வழங்கவில்லை. அதனால், பல மாதங்களாக பூங்காவில் படுத்து உறங்கினேன். இதனால் உடல்நலம் கடும் பாதிப்புக்குள்ளானது. இந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு விரைவில் சொந்த ஊருக்கு செல்வதே எனது ஆசை” என்றார்.
மேலும்,”வழியிருந்தால் இந்தியாவுக்கு நடந்தேகூட சென்றுவிடுவேன்” என்று சோகத்துடன் கூறினார்.