பலாசோர்: 500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும், இந்தியாவின்  பிரலே ஏவுகணை  சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

நிலத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்திய  ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் பிரலே என  ஏவுகணை உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணையானது 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அளிக்கும் வல்லமை பெற்றது.

இந்த ஏவுகணை சோதனை இன்று  ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து,  இன்று காலை  (22.12.21 ) 10.30 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தவகை ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏவுகணை சோதனையை,  கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலை தூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரலே ஏவுகனை சோதனை வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. போர்க்களப் பயன்பாட்டிற்காக  திட-எரிபொருள் கொண்டு இயங்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது 500முதல் 1000 கிலோ அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகவும்,  பிரலே ஏவுகணை இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போதும், அதன் திசையை (பாதையை) மாற்றியமைக்கும் வகையில் அதிநவீன  வசதியை பெற்றிருப்பதகாகவும் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.