நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு பதிலாக நாய்கள் படுத்து உறங்குகின்றன. இதைப் பார்த்து நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக நோய் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 719 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர்.

இவ்வாறு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது இந்த வார்டில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்த கொரோனா சிறப்பு படுக்கையில் நோயாளிகளுக்கு பதிலாக 2 நாய்கள் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தன.

இதனை கண்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனாலும் நாய்களை விரட்ட மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் உள்பட யாருமே எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் கொரோனா ஒரு கடுமையான தொற்றுநோய் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் என்றாலும் மருத்துவமனையில் பணியில் இருந்த பணியாளர்களும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.