சென்னை: டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற பயணிகள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கவேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப பெற பயணிகளிடம் இருந்து வங்கி கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் ஒரு போதும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை.

மோசடி கும்பலை சேர்ந்த சிலர் இதுபோன்று தொலைபேசி வாயிலாக கேட்பதாக புகார்கள் வருகின்றன. ஆகவே, வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி பின் எண்கள், ஏடிஎம், பாஸ்வேர்டு ஆகியவைகளை தெரிவிக்க வேண்டாம்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தின் மூலம் பதிவு செய்த பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தொகை பயணம் ரத்தாகும் போது பயணிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ரயில் நிலையங்களில் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுக்கான கட்டணம் ரயில்வே ஸ்டேஷன்களிலேயே திரும்ப வழங்கப்படும்.

எனவே தனிநபர் வங்கி கணக்கு சம்பந்தமான விஷயங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். யாராவது இது போன்று தகவல்களை கூறுமாறு தொலைபேசியில் கேட்டால், பயணிகள் தொலைபேசி எண் 138ல் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.