சென்னை: திமுக எம்.பி. கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியின் மகள் கனிமொழி. இவர் தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இவரது கணவர் பெயர் அரவிந்தன. இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவ்வப்போது தமிழ்நாடு வரும் அவர் பெரும்பாலும் அங்கே தங்கி தனது தொழில்களை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில்,  தி.மு.க எம்.பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம்  தகவல்கள் வெளியானது. அவர் நுரையீரலில் தொற்று காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும்,  கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். தற்போது,  அரவிந்தனின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில், அதாவது ஒரு வார காலத்துக்குள் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சற்று உடல்நிலை தேறிய கணவர் அரவிந்தனை கனிமொழி, சிங்கப்பூரில் இருந்து, சென்னை அழைத்து வந்து,  இங்குள்ள  அப்போலோவில் தொடர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.  நுரையீரல் தொற்று காரணமாக, அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றுகாலை திடீரென அப்போலோ சென்னை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சிகிச்சை பெற்று வரும் அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடம் கேட்டறிந்தார்.