கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை மீண்டும் தினசரி 5 முறை இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா தாக்கம் அதிகரித்ததால் கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.  கடந்த 2021 மார்ச் மாதம் முதல் இது சிறப்பு ரயில் சேவையாக மீண்டும் தினசரி ஒரு முறை இயக்கப்படுகிறது.  இதற்கான கட்டணமாக முதலில் ரூ.10 வசூலிக்கப்பட்டது.  தற்போது இது சிறப்பு ரயிலாக மற்றப்பட்டதால் கட்டணம் ரூ.30 ஆகி உள்ளது.

திமுகவை சேர்ந்த நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ  ராசா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் அவர், “கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை-மேட்டுப்பாளையம் இடையிலான பயணிகள் ரயில் தற்போது தினமும் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு இந்த ரயில் 5 முறை இயக்கப்பட்டு வந்தது. தற்போது மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால்,கோவை – மேட்டுப்பாளையம் இடையே பேருந்தில் பயணிக்க அதிக நேரமாவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், சாதாரண பயணிகள் ரயிலில்  ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது சிறப்பு ரயிலில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது., தினசரி கூலி வேலைக்குச் செல்வோர், தொழிலாளர்கள்  இதனால் பாதிப்பு அடைகின்றனர். எனவே, கோவை – மேட்டுப்பாளையம் இடையே சாதாரணப் பயணிகள் ரயிலை மீண்டும் தினசரி 5 முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டு கொண்டுள்ளார்.