சென்னை

திம்க சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும் மருமகளும் பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மற்றும். செல்வி ஆகியோரின் மகள் ரேகா சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கடந்தாண்டு மே மாதம் முதல் மாத சம்பள அடிப்படையில் வீட்டு வேலை செய்யும் பணிக்குச் சேர்ந்தார்.

ரேகாவுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சேர்ந்து ரேகாவை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ரேகா அளித்த புகாரின் பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுவது, தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கடந்த 25-ம் தேதி ஆந்திராவில் கைது செய்தனர். அவர்களை தனிப்படை காவல்துறையினர் சென்னை அழைத்து வந்தனர். பின்னர் சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் முன்னிறுத்தினர்.

அப்போது ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை பிப்ரவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகன், மருமகள் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நாளை இந்த மனு விசாரணைக்கு வருகிறது.