தூத்துக்குடி: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி யாருக்குமே பயனில்லாத ஆட்சி என்று திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜி.வி. மார்க்கண்டேயனை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கரந்தை, கடலையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் படித்த இளைஞர்கள் வேலை இன்றி உள்ளனர். விளாத்திகுளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ தொகுதி பக்கம் வரவில்லை என்பதால் அவரை மக்கள் பலருக்கு தெரியவில்லை.

அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பில்லை, விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. வறட்சி, மழை, பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தமிழக அரசு இழப்பீடும் கொடுக்கவில்லை, பயிர் காப்பீடும் சரிவர கிடைக்கவில்லை.

யாருக்குமே பயனில்லாத ஒரு ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் சரியாக கொடுப்பது இல்லை. ரேஷன் பொருட்களை அந்த துறையைச் சார்ந்த அமைச்சரே வெளி சந்தையில் டன் கணக்கில் விற்பனை செய்து விடுகிறார் என்று பேசினார்.