ங்கீகாரம் அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் பல்வேறு சலுகை களுள் வருமான வரி விலக்கும் ஒன்று.

வரி விலக்கு பெறுவதற்கு ஒவ்வொரு கட்சியும் ஆண்டு தோறும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கட்சி தலைவரோ-பொருளாளரோ ‘எங்க கட்சி வருமானம் இவ்வளவு தான்’’என்று காகிதத்தில் எழுதி கையெழுத்து போட்டு அனுப்பி விட முடியாது.

வருமானம் வந்ததற்கான வழிகளை தெளிவாக குறிப்பிட்டு-அதனை முறையாக தணிக்கை (ஆடிட்) செய்து உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.அப்போது தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய அரசியல் கட்சிகளில் 37 கட்சிகள்-2017-18 ஆம் ஆண்டில் தங்களது வருமானம் எவ்வளவு என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளன.

இதனை ‘ஜனநாயக புனரமைப்புகான அமைப்பு’ (ஏ.டி.ஆர்) அண்மையில் வெளியிட்டது.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகளின் வருமானம் தெரிய வந்துள்ளது.

தேசிய அளவில் அதிக வருமானம் உள்ள கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உள்ளது.கடந்த (2017-18) ஆண்டு அதன் வருமானம்-47.19 கோடி ரூபாய்.

அதற்கு அடுத்த  இடம்-தி.மு.க.வுக்கு.இந்த கட்சியின் வருமானம் 35.74 கோடி ரூபாய்.இதற்கு முந்தைய ஆண்டில் தி.மு.க.வருமானம் வெறும் 3 கோடியே 78 லட்சம் ரூபாய் தான்.

ஒரே ஆண்டில் ‘கிடு..கிடு’வென வருமானம் அதிகரித்த ரகசியம் என்ன?

தி.மு.க.பிரமுகர் அளித்த விளக்கம் இது:

‘’கடந்த ஆண்டு நாங்கள் உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்தினோம். ஏற்கனவே உறுப்பி னர்களாக உள்ளோர் –நிலுவைத்தொகையுடன் செலுத்திய பணம்- புதிய உறுப்பினர் அட்டை பெறுவதற்கு செலுத்திய பணம் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்தோர் உறுப்பினர் கார்டு பெறுவதற்காக கொடுத்த பணம்- என மொத்தம் 22 கோடி வசூலானது’’ என்றார் –அந்த தி.மு.க.பிரமுகர்.

இது தவிர கட்சி பெயரில் வங்கிகளில் இருப்பில் உள்ள ‘டெபாசிட்’ தொகைக்கான வட்டியாக 11.77 கோடி ரூபாய் வந்துள்ளது.

–பாப்பாங்குளம் பாரதி