சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்  எதிர்ப்பபு தெரிவித்து, அதிமுக அரசை  கடுமையாக விமர்சித்துள்ளன.

கொரோனா தொற்று பரவல் நடடிவகையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், 7வது கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன்  செப்டம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, இ-பாஸ் ரத்து, போக்குவரத்து சேவை தொடக்கம், மெட்ரோ ரயில் சேவை இயக்கம், அனைத்து தொழில்நிறுவனங்களும் இயங்க அனுமதி, மற்றும் மால்கள், கோயில்கள் திறக்க அனுமதி என பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு அளித்துள்ளது.

இந்த தளர்வுகளுக்கு  திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திமுக பொருளாளர் துரைமுருகன், 144 தடை விதித்தும், 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவித்துள்ளது அரசின் தெளிவில்லாத முடிவை காட்டுகிறது என குற்றம் சாட்டி ள்ளார்.

மேலும், கொரோனா தமிழகம் வந்தால் சரி செய்து விடுவோம் என சட்டப்பேரவையில் கூறிய முதமைச்சரால், இன்று வரை சரி செய்ய முடியவில்லை எனவும் , ஊரடங்கால், திமுகவின் தேர்தல் பணியை முடக்கி விட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஊரடங்கு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆரம்பம் முதலே ஒரு தெளிவின்றி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஒருபுறம் 144 தடை உத்தரவு, மறுபுறம் பல்வேறு தளர்வுகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் மட்டுமே செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அரசியல் உள்நோக்கத்தோடு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என்றும், ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுபடுத்த முடியாது என சுகாதாரத் துறையே தெரிவித்துள்ள நிலையில், இந்த 144 தடை அரசின் உள்நோக்கை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வாதிகார போக்குடன் அரசு செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே, தேர்தலை மனதில்கொண்டே, மாநில அரசு, இ-பாஸ் உள்பட கட்டுப்பாடுகளை நீடித்து வருவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், தற்போது தமிழகஅரசு  அறிவித்துள்ள தளர்வுகளையும் குற்றம்சாட்டியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சிக்கப் பட்டு வருகிறது.