சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும், இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். சனாதன சக்திகளை விரட்டியடிக்க நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  70வது பிறந்தநாள் நேற்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட  நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தலைவர்கள் மட்டுமின்றி தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவரும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்பட  பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு, முதலமைச்சர் வாழ்த்தினார்.

இந்த விழாவுக்கு வந்தவர்களை தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்புரையாற்றினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “என்னுடைய வயது 81, ஆகவே எனக்கு வாழ்த்த வயது உள்ளது. பூரண உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன்.

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது.

சமூகநீதியைக் காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்திய ஒற்றுமை பயணம் மாபெரும் வெற்றி பெற்றது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தைக் காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா முடித்து வைத்தார்.

ஒன்றிய பா.ஜ.க அரசின் அழுத்தங்களுக்கு தி.மு.க அரசு இடம் தரவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஒரு இன்ச் அளவுகூட வெற்றி பெற முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டின் தத்துவம் அப்படியானது. திராவிடக் கருத்தியலைப் பின்பற்றிச் செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பா.ஜ.க.வின் ஒரு கொள்கைகூட மக்கள் நலனுக்கு உகந்ததாக அல்ல. பா.ஜ.க அரசு அரசியல் சாசனத்தையே மாற்ற முயற்சி மேற்கொள்கிறது. இதை நாம் ஒன்றி ணைந்து எதிர்க்க வேண்டும். சனாதன சக்திகளை விரட்டியடிக்க வேண்டும் .

தமிழ்நாடு எப்போதும் சிறந்த வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. நல்ல தலைவர்கள், எழுத்தாளர்கள், அதிகாரிகளை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு.  இங்கு  திமுக, காங்கிரஸ் ஒன்றிணைந்து பல தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த கூட்டணி 2024 நாடாளு மன்ற தேர்தலிலும் தொடரும். பெரு வெற்றி பெறும் என்றவர்,

அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் போராட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை தாங்குவார். திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து 2024 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.