சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்றும், திமுக எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கு இந்திய அரசு உதவி வருகிறது. அத்துடன் தமிழக அரசும், தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதாக அறிவித்து உள்ளது. அத்துடன்,  இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தநிலையில்,  இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்எல்ஏகளின் ஒரு மாத ஊதியம் மற்றும் கட்சி சார்பில் ஒரு கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி” – என்பது வள்ளுவர் வாக்கு. “உலகம் உண்ண உண்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம்.

அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்பவுள்ளோம். மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்