சென்னை:  வட சென்னை வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, அதிமுக திமுகவினர் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,  அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாஜக வேட்பாளர் மனு ஏற்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு தரப்பும் வேட்புமனுவை பரிசீலனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு பேரின் வேட்புமனு பரிசீலனையும்  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 20ந்தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 27ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.  அதன்படி, இன்று வடசென்னையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், வேட்புமனு பரிசீலனை  தொடங்கியது. அப்போது, அதிமுக, திமுகவினர் வேட்புமனு பரிசீலனை குறித்து கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து,  வடசென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக ராயபுரம் மனோவும், திமுக சார்பாக கலாநிதி வீராசாமியும் போட்டியிடுகின்றனர். இவர்கள்  வேட்புமனு தாக்கல் செய்யும் போது வட சென்னை தொகுதியில், யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அமைச்சர் சேகர்பாபுவுக்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து முதலில் டோக்கன் வாங்கிய அதிமுக வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கினார். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது திமுகவினர் அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அதிமுகவினர் திமுக வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மாறி மாறி  வலியுறுத்தினர். இரண்டு தரப்பும் மாறி, மாறி புகார் தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு பேரின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

அதே நேரத்தில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.