சென்னை,

தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து போனஸ் குறித்து, மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ஆண்டுதோறும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக சென்னையில் அதிகாரிகள் இன்று தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும், முதல் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளை தவிர, மற்ற ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும், தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

அதன்படி, வரும் தீபாவளிக்கு, போனஸ் வழங்குவதற்காக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

காலை 11 மணிக்கு மின்வாரிய அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையில் கலந்துக்கொள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட 17 தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சு வார்த்தையில், மின்வாரிய ஊழியர்களின் விருப்பம் அறியப்பட்டு, அதன்படி முடிவெடுத்து, தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது.