சென்னை,

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா ஜங்ஷனில் அதிரடி போராட்டம் நடத்தியதாக இயக்குநர் கவுதமன்  உள்பட பலர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கவுதமன் உள்பட 6 பேர் நேற்று முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

டில்லியில் கடந்த 32 நாட்களாக  போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லை போன்றவற்றை  வலியுறுத்தி சென்னை கத்திப்பாரா மேம்பால சாலையை சங்கிலியால் பூட்டி,  20-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதையடுத்து  திரைப்பட இயக்குநர் கவுதமன் கல்லூரி மாணவர்கள் அரவிந்த், உமாகார்கி, கோபாலகிருஷ்ணன், பிரபாகரன், அருள் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட 6 பேரும் சிறையிலிருந்தவாறு போராட்டத்தை தொடர்கின்றனர்.

டில்லி ஜந்தர்மந்திரில் போராடி வரும  தமிழக விவசாயிகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இளைஞர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.