டில்லி:

டந்த மூன்று வருடங்களில்  இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து உற்பத்தி வரியை குறைக்கும்படி நிதி அமைச்சகத்தை எண்ணெய் அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. . இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு பீப்பாய் பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் 69.41 அமெரிக்க டாலர்கள் என்னும் அளவை எட்டியது. இதேபோல் டீசலின் விலை ஒரு பீப்பாய் 63.99 அமெரிக்க டாலர்களாக  உயர்ந்தது.

இதனால் இந்தியாவின் அனைத்து நகரங்களில் நேற்று பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

(அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டு இருப்பது முந்தைய நாள் விலை நிலவரம்)

தலைநகர் டில்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 72 ரூபாய் 38 காசுகளாக (72.23) இருந்தது. அதே நேரம் சென்னையில், லிட்டர் 75 ரூபாய் 6 காசுகளாகவும் (74.91), கொல்கத்தாவில் 75 ரூபாய் 9 காசுகளாகவும் (74.94), மும்பையில் மிக அதிகபட்சமாக 80 ரூபாய் 25 காசுகளாகவும் (80.10) உயர்ந்தன.

இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. டில்லியில் நேற்று ஒரு லிட்டர் டீசல் 63 ரூபாய் 20 காசுகளாகவும் (63.01), இது சென்னை ரூ.66.64 (66.44), கொல்கத்தாவில் ரூ.65.86 (65.67), மும்பை ரூ.67.30 (67.10) ஆகவும் இருந்தது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

தற்போது, மத்திய அரசு பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக ஒரு லிட்டருக்கு 19 ரூபாய் 48 காசுகளும், டீசலுக்கு 15 ரூபாய் 33 காசுகளும் விதிக்கிறது.   தவிர மாநில அரசுகள் இவற்றின் மீது மதிப்பு கூட்டு வரி வசூலிக்கின்றன. இதனால்  பெட்ரோல், டீசல் மீதான விலை மேலும் அதிகரிக்கிறது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே போவதால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவற்றின் மீதான வரிகளை குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து எண்ணெய் அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் 2018-19-ம் ஆண்டு தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்த தகவலை எண்ணெய் அமைச்சகத்துறை செயலாளர் கே.டி.திரிபாதி தெரிவித்தார். ஆனாலும்,  இது குறித்து விரிவாக பேச அவர் கூற மறுத்து விட்டார்.