சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற  டிடிவி தினகரன் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், தலைமை செயலகம் வரும் அவரின் காரை தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தும் வகையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜெ.முதல்வராக இருந்த வரையில் இந்த பகுதியில் கார் நிறுத்த அனுமதிக்காத நிலையில், தற்போது டிடிவியின் காரை நிறுத்த சிறப்பு அனுமதி வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக தலைமை செயலகம் வரும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகளின் கார்கள் மட்டுமே நிறுத்தப்படும். மற்றவர்களின் வாகனங்கள் தலைமை செயலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் வளாகத்திலேயே நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏவான டிடிவி தினகரனின் எஸ்யுவி கார் கேட் 4 அருகில் நிறுத்த சட்டசபை அலுவலரிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாகவும், அவரது காரை போலீசார் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் தலைமை செயலகத்தில் இருந்து வெளியேறும் வரை கார் அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பகுதியில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காரும் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற உறுப்பினர்க ளின் கார்கள் அந்த பகுதியில் வந்து, உறுப்பினர்களை சபைக்கு செல்லும் வகையில்  இறக்கிவிட்டதும், அங்கிருந்து சென்றுவிடும். வேறு யாரும் அந்த பகுதியில் கார் நிறுத்த தலைமை செயலக காவலர்கள் அனுமதி அளிப்பது கிடையாது.

ஆனால் டிடிவியின் காரை நிறுத்த அனுமதி அளித்திருப்பது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது தலைமை செயலக ஊழியர்களிடையே புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை  இந்த இடத்தில் எந்வொரு காரும் நிறுத்த அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது டிடிவி தினகரன் கார் நிறுத்த சிறப்பு அனுமதி வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.