சென்னை,

வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த வழக்கில் எம்.நடராஜன் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கில் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில்,  சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் உடல்நலத்தை காரணம் காட்டி   ஆஜராகாமல் தவிர்த்து வந்த நடராஜனுக்கு கடந்த டிசம்பர் 7ந்தேதி சிபிஐ கோர்ட்டு  பிடிவாரண்டு பிறப்பித்தது.

அதையடுத்து நடராஜன் இன்று சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

கடந்த 1994 ம் ஆண்டு லெக்சஸ் எனும் வெளிநாட்டு சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன்மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த கார் இறக்குமதி  செய்ததன் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை வரி மோசடி செய்ததாக நடராஜன், பாஸ்கரன் உள்பட நான்கு பேர்மீது  சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கோர்ட் நீதிமன்றம், நடராஜன் உள்பட நால்வருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன், பாஸ்கரன் உள்பட நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், உடல்நலமில்லாமல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், அதை காரணம் காட்டி சிறை தண்டனையில் இருந்து உச்சநீதி மன்றம் விலக்கு அளித்திருந்தது.

இந்நிலையில், சிபிஐ கோர்ட்டின் விசாரணையின்போது தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நடராஜனின் உடல்நலக் குறைவைக் கருத்திக் கொண்டு, சீரணடைய நீதிமன்றம் விலக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில், நடராஜன் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.