மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். இக்கோயிலின் சிறப்பு இங்கே நடைமுறையில் இருக்கும் “பிராது” எனும் வழக்குப் பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்றவையாகும். இங்கு பங்குனி உத்தரம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிராது கட்டுதல்
பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்ப்பிப்பார்கள். சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவைத் தந்து, குறையைத் தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்
பிராது கட்டுதலில் பின்பற்றப்படும் வழிமுறைகள்
மக்கள் காகிதத்தில் எழுதிக் கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டுப் பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக் கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்.
பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.
வேப்பெண்ணெய்
இத்திருத்தலத்தில், பூசித்து விபூதியிடப்பட்ட வேப்பெண்ணெய் மருந்தாக வழங்கப்படுகின்றது.
சூறை விடுதல்
விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்குக் கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறை விடுதல் எனப்படுகிறது. பொதுவாக சூறை விடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.