சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதையடுத்து, மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்களை வீடு தோறும் சென்று ஆய்வு நடத்த மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் ககன்தீப் சிங் பேட்டி தலைமையில் நடைபெற்றது. இதில்  அரசு கூடுதல் தலைமை செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையாளர் கே. பனீந்தர ரெட்டி, இ.ஆ.ப. உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆணையாளர் பேடி,  பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள்தோறும் ஆய்வு செய்யவரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வண்டுகோள் விடுத்தார்.

மேலும், மேலும் 256 மருந்துத் தெளிப்பான்கள், 167 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்பிரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள், 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்களைக் கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று கூறியவர்,

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள அடையாறு (27), கோடம்பாக்கம் (18), தேனாம்பேட்டை (15) ஆகிய மண்டலங்களில் கள ஆய்வுமேற்கொண்டு கொழுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

டெங்கு ஒழிப்பு பணியில் 1,260 நிரந்தரப் பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பேர்  ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 12 ஆயிரத்து 546 வீடுகள், 99 திறந்த நிலையில் உள்ள கிணறுகள், 174 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 113 கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், 102 காலி இடங்களில் கொசுப்புளு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றுவரை கொசுப்புழு வளரும் இடங்களைக் கண்டறிந்து கட்டடத்தின் உரிமையாளர்களுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் வீடு, சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, நீர்த் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் புகாத வண்ணம் மூடிவைக்க வேண்டும்.

கொசு ஒழிப்புப் பணிகள் குறித்த ஒரு வார காலத்திற்கான அட்டவணை மாநகராட்சியின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அட்டவணையில் உள்ள நாள்களில் தங்களின் பகுதியில் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் கொசுப்புழு குறித்த புகார்களைப் பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கூறினார்.