சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு, கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து  உரையாற்றினார். அப்போது, மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான் என்றார்.

நாடு முழுவதும் இன்று  மகாத்மா காந்தி 155வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, , தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அதனை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-

கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிற பொதுமக்கள் எல்லோருக்கும் உங்களின் ஒருவனான இந்த மு.க.ஸ்டாலினின் அன்பு வணக்கம்!

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான், கிராம சபை கூட்டங்களை முறையாக – தடங்கல் இல்லாமல் நடத்தி கொண்டு வருகிறோம்.

கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்தச் சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோல கிராம சபைக் கூட்டங்களை தடையில்லாமல் நடத்துகிறோம்.

மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கம் இருக்கிற உத்தரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு இதை சொல்கிறது.

யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதிக் குடத்தில் போடுவார்கள். அந்தக் குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை. இப்படித்தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது.

அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது.

சோழப் பேரரசில் ‘ஊர் மற்றும் மகாசபை’ என்கிற இரு வேறு அவைகள் இருந்தது. இதில் மகாசபையை போன்றதுதான் தற்போதைய கிராமசபை என்று அறியமுடிகிறது. மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கிற கிராம சபைக் கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்களுடைய தேவைகளையும், பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.

இது இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பதைப் போல, கிராம அளவில் கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக அமைந்திருக்கிறது.

கிராம சபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் – 1994 குறிப்பிட்டிருந்தாலும், அதை ஆண்டுக்கு நான்கு முறை என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாற்றி அமைத்தார். தற்போதைய திராவிட மாடல் அரசானது, இதை ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று அதிகரித்திருக்கிறோம்.

அதன்படி, ஆண்டொன்றுக்கு முறையே *குடியரசு நாள், *உலக தண்ணீர் நாள், *தொழிலாளர் நாள், *விடுதலை நாள், *காந்தியடிகள் பிறந்தநாள் *உள்ளாட்சிகள் நாள் ஆகிய 6 நாட்களில் கிராமசபை நடைபெற்று வருகிறது. ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

*கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை அங்கீகரித்தல், *ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், *ஊராட்சிகளின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்தல், *பயனாளிகளைத் தேர்வு செய்தல், திட்டக் கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கிராம சபைகள் பல சிறப்பு செய்கைகளைச் செய்கிற வகையில், நலிந்தோர்க்கும், வறியோர்க்கும் உதவி செய்ய மாற்றுத் திறனாளிகள் நலன், முதியோர் நலன், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதீத ஈடுபாடு காட்டிட வேண்டும். கல்விக்காக நம்முடைய அரசு எடுக்கிற முயற்சிகள் எல்லாவற்றிலும் கிராம சபைகள் முக்கியப் பாலமாக இருக்க வேண்டும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைத்திருக்கிறேன். உங்கள் குழந்தைகள் இப்போது பள்ளிக்கு சென்று, சாப்பிடுகிறார்களா?

தமிழ்நாடு முழுக்க 16 லட்சம் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்கள்! அதுமட்டுமல்ல, எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளி உட்கட்டமைப்புத் திட்டங்கள், இதுமாதிரியான திட்டங்களை நீங்கள் மேம்படுத்த உதவி செய்து செயல்படுத்த வேண்டும்.

இன்றைக்கு கிராம சபையில் பங்கெடுத்த நீங்கள், பங்கேற்காத உங்கள் ஊர் மக்களிடம் போய் சொல்லுங்கள், கிராம சபையை ஒரு ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றக் களமாக கருதி கலந்து கொள்ள வேண்டும் என்று.

கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

மகளிர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் கலந்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படுகிற பணிகள் பொதுவானதாகவும் எல்லோரும் பயன்பெறும் வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.

*நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், *தண்ணீரின் முக்கியத்துவம், *நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், *நீர்நிலைகளைப் பாதுகாத்தல் – போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

*சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், *சுகாதாரம் பேணுதல், *முறையான திட, திரவக் கழிவு மேலாண்மை செய்தல் – போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை நிலைநிறுத்துகிற வகையில், எல்லா ஊராட்சி மன்ற தலைவர்களும் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

*மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே

6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.

விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்கள்தான் அதிகமாக பயனடைகிறார்கள். 1000 ரூபாய் என்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இன்னும் சொன்னால், ஊரகப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இந்தத் திட்டம் வழிவகை செய்திருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே – மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள், உயர்கல்விக்காகக் கல்லூரியில் சேர்ந்தால், அவர்களுக்குப் புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம்.

வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இருப்பதும் நம்முடைய கழக அரசுதான். இதன் மூலமாக, பாசனப் பரப்பும் அதிகமாகி, வேளாண் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு புத்துயிர் வழங்கி, விரிவுபடுத்தி கொண்டு வருகிறோம்.

இப்படியாக, கிராமங்களுடைய – கிராம மக்களுடைய ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் சிறப்பு கவனத்தை திமுக அரசு செயல்படுத்தி கொண்டு வருகிறது.

அனைத்துத் துறையும் வளர வேண்டும் – அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது – கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்.

“ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக – தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டு வருகிறேன்.

அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாகவேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.

இன்று அக்டோபர் 2, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். “இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, ‘கிராம சுயராஜ்ஜியம்’ எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார்.

தற்சார்புள்ள கிராமங்கள் – தன்னிறைவு பெற்ற கிராமங்கள் – எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள் – சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் – ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும், உழைக்கும், உழைக்கும்!

இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   “இந்த அரசு மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த 4 கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. மேலும் கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் பொதுமக்களை இதுபோன்ற கிராமசபை கூட்டங்களுக்கு வரவழைக்கும் வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு, பல ஊராட்சிகளிலும் வீடு தோறும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் நலன், காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத் தொகை, விவசாயிகள் நலன்,நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குறும்படங்கள் ஒளிபரப்பி மக்களிடையே காட்சிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள்
கிட்டதட்ட தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் தனது உரையில், “கிராம சபை கூட்டங்களை திமுக அரசு முறையாக எந்தவித தடங்கலும் இன்றி நடத்திக்கொண்டு வருகிறது. கிராம மக்களின் குரல் எந்த சூழ்நிலையிலையும் தடையின்றி ஒலிக்க வேண்டும் என்று தான் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகிறது. மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கும் உத்திரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயக தேர்தல் முறை பிறந்த தொட்டில் என வரலாறு சொல்கிறது. குடவோலை முறையால் தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி அமைப்பு மலர்ந்துச்சு. அந்த வகையில் கிராமங்களில் தான் மக்களாட்சி முதல் முறையாக தோன்றியது. கிராம சபை கூட்டம் என்பது சோழ பேரரசு காலம் தொட்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த பேரரசில் ஊர் மற்றும் மகாசபை என்ற இரு அவைகள் இருந்துச்சு. இதில் மகா சபை தான் தற்போதைய கிராம சபை. மக்களாட்சியின் ஆணி வேராக இருப்பது கிராம சபை கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து தங்களுடைய தேவைகளையும், பயன்களையும் விவாதித்து வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலேயும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்” என தெரிவித்தார்.

இன்று ஒவ்வொரு மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். கிராமசபை கூட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் அனைத்து ஊராட்சிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை தொடங்கி டெங்கு காய்ச்சல் தடுப்பு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் ஆகியவை பொதுப் பொருளாக வைத்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.